அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

கீழுள்ள அமைப்புச் சட்டம் (பைலா) 20-01-2019 அன்று திருப்பூரில் நடைபெற்ற ஜமாஅத்தின் முதல் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

கொள்கை :

           வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற கருத்தைத் தரும் லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி எனும் தூய கலிமாவே எமது முதலும் முடிவுமான முக்கியக் கொள்கையாகும்.

விளக்கம் :

         இக்கொள்கை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று இறைவனைப் பற்றியது. அடுத்தது இறைத் தூதரைப் பற்றியது.

இறைவன் அல்லாஹ் ஒருவனே. அவனே அகிலங்கள் அனைத்தையும் படைத்து, பராமரித்து, நிர்வகித்து வருகிறான்.

வழிபடுவதற்கும், அடிபணிவதற்கும் உரியவன் அவன் மட்டுமே. சட்டமியற்றும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது.

அவன், மனைவி மக்கள், பெற்றோர், பிள்ளை, இணை துணை ஏதுமில்லாதவன். ஒப்புவமையில்லாத, தனித்த, உயர்ந்த இரட்சகன் அவன்.

அவனை அஞ்சி, அவனிடமே உதவி தேடி, அவனை மட்டுமே வணங்கி, அவனது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, அவனுடைய வழிகாட்டுதலுக்கு இணங்க உருவாக்கப்பட்ட விதிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு, நமது விருப்பு, வெறுப்புகளையெல்லாம் அவனுக்கு முன்னால் கட்டுப்படுத்தி, அல்லாஹ்வுக்கு நல்ல அடியார்களாக வாழ்ந்திட வேண்டும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பது இந்தக் கொள்கையின் இரண்டாம் பகுதி.

யுக முடிவு நாள்வரை மனித குலம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக இறைவன் அனுப்பிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்.

அவர்கள் வழங்கிய அறிவுரைகள், வழிமுறைகள் அனைத்தையும் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் வழங்கும் தீர்ப்புக்கு முழுமையாகக் கட்டுப்பட வேண்டும். அவர்களை மட்டுமே சத்தியத்தின் அளவுகோலாகக் கொண்டு செயல்பட வேண்டும்

பெற்றோர், பிள்ளை, குடும்பம், கோத்திரம் அனைத்தையும் விட நபிகள் நாயகத்தை நேசித்து அவர்கள் காட்டிய வழியில் நடக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக குர்ஆனையும், குர்ஆனுக்கு முரணில்லாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோக்கம் :

          இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி, கூடுதல் குறைவின்றி, விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் இயன்றவரை வாழ்வில் கடைபிடித்து, பிறரையும் வாழத் தூண்ட வேண்டும்.

மனிதனின் அகம், புறம், வணக்க வழிபாடு, பொருளியல், குடும்பவியல், சமூகவியல், உட்பட வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாத்தை நிலை நாட்ட, பாடுபட வேண்டும்.

சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பயன் தரும் வகையில் சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உறுப்பினர் :

            லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி எனும் தூய கலிமாவை அதன் முழு விளக்கத்தோடு புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயன்றவரை அதற்கு முரணில்லாத வகையில் தம் வாழ்வை அமைத்துக் கொள்வேன் என உறுதியேற்க வேண்டும்.

அமைப்பின் விதிகளைப் புரிந்து கொண்டு அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதியளிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கடைபிடிக்க முன்வருபவர் யாராயினும் கிளை மாவட்ட ஒப்புதலுடன் இதன் உறுப்பினர் ஆக முடியும்.

உறுப்பினர்கள் கிளைப் பொதுக்குழுவில் கலந்து கொள்ளவும், தீர்மானங்கள் மீது வாக்களிக்கவும், கிளை பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுக்கப்படவும் தகுதி படைத்தவர்களாவர்.

உறுப்பினர்கள் இஸ்லாத்துக்கும், அதற்கு மாற்றமான கொள்கைக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடமையான, மற்றும் உபரியான வணக்க வழிபாடுகள் மூலம் இறை நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆணவத்தையும், மன இச்சைகளையும் தகர்த்தெறிந்து, இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணியும் நல்ல அடியனாகி ஆகி விட வேண்டும்.

வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீதி, நேர்மை, இறையச்சம் எனும் இஸ்லாமிய நெறிமுறைகளை பிரதிபலிக்க வேண்டும்.

செயல் திட்டங்கள்:

பொதுக் கூட்டம், துண்டுப் பிரசுரம், புத்தகம், தொலைக்காட்சி, சமூக வலைதளம், தனிநபர் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து வழிகளையும் பயன்படுத்தி நமது கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது,

பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியாகப் போராடுவது,

தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட பாடுபடுவது,

சமூகம் கல்வியில் மேம்பட நூலகங்கள் அமைப்பது, கல்விக் கூடங்களை நிறுவுவது, வழிகாட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவது

சமத்துவ ஜனநாயகத்தை உறுதிப்படுத்த விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்காக பாடுபடுவது

சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அனைவரும் பயன்படும் வகையில் இரத்த தானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட உயிர் காக்கும் பணிகளை மேற்கொள்வது,

மேற்கண்ட பணிகளுக்காக தேவைக்கேற்ப அலுவலகங்களை அமைத்துக் கொள்வது,

அரசியல் நிலைபாடு :

நேரடியாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியாக இவ்வமைப்பு செயல்படாது. சூழலுக்கு ஏற்ப செயற்குழு அல்லது பொதுக்குழுவைக் கூட்டி ஆதரவு நிலையை அறிவிக்கும்.

அமைப்பின் விபரம் :

பெயர்  “ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்”.

பதிவு எண் மற்றும் பதிவு அலுவலகம்: 396/2018

சென்னை மாவட்டப் பதிவாளர், சென்னை மாவட்டப் பதிவாளர் அலுவலகம்

தலைமை முகவரி : 10, உஸ்மான் கான் தெரு , சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600002

துவக்க நாள் : 09/09/2018

அலுவலக நேரம் :

காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை

கொடி :

கொடி இரண்டு வண்ணம் கொண்டதாகும். மேலே சிவப்பு, கீழே வெள்ளை என சம அளவில் இருக்கும்.

தலைமை நிர்வாகம் :

அமைப்பு நிர்வாகக் குழுவே இதன் தலைமை நிர்வாகமாகும். அது ஒரு தலைவர், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர். ஒரு துணைத் தலைவர், ஒரு துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தேவைக்கேற்ப செயலாளர்களைக் கொண்டதாகும்.

இந்நிர்வாகம் அமைப்பின் பொதுக்குழுவால் நிர்வாக தேர்தல் விதிமுறைப்படி தேர்ந்தெடுக்கப்படும்.

தலைமை நிர்வாகத்தின் பதவிக் காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகும்.

நிர்வாகக் கூட்டம் குறைந்தது மாதம் இரண்டு முறை கூட்டப்படும்.

 தலைவர் : இவரே அமைப்பின் முதன்மை நிர்வாகி. அமைப்பின் அன்றாட செயல்பாடுகளை கண்காணிப்பார். நிர்வாகக் குழுவை கூட்டுவார். அனைவரின் ஆலோசனைகளையும் பெற்று அமைப்பை வழிநடத்துவார்.

பொதுச் செயலாளர் : தலைவரின் ஆணைக்கிணங்க தலைமைப் பணிகளை செயல்படுத்துவார். தலைமை நிர்வாகக் குழுவின் ஒப்புதலோடு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

பொருளாளர் : பொருளாதாரம் சம்பந்தமான அனைத்து வரவு, செலவுகளையும் கவனிப்பார். தலைவர் மற்றும் பொதுச் செயலாளருடன் இணைந்து வங்கிக் கணக்குகளை இயக்குவார். அவர்களின் ஒப்புதலோடு செலவிடுவார். பொருளாதாரத்தைக் கையாள்வார்.

துணைத் தலைவர் : தலைவருக்கு உதவியாக இருப்பார். தலைவர் இல்லாதபோது அவரது பணிகளை நிறைவேற்றுவார். மேலும் நிர்வாகக் குழுவில் வழங்கப்படும் பணிகளை செயல்படுத்துவார்.

துணைப் பொதுச் செயலாளர் : பொதுச் செயலாளர் இல்லாதபோது அவரது பணிகளை நிறைவேற்றுவார். நிர்வாகக் குழுவில் வழங்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்றுவார்.

அமைப்புச் செயலாளர்: தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகக் குழுவில் வழங்கும் பணிகளைச் செயல்படுத்துவார்.

அலுவலக முறை:

அமைப்பின் அலுவல்கள் அமைப்பு நிர்வாகக் குழுவால் மேற்கொள்ளப்படும்.

அலுவல் அதிகாரி:

அமைப்பின் அன்றாட அலுவல்களையும், நிர்வாகத்தையும் அமைப்புத் தலைவரே கவனிப்பார்.

 அமைப்பின் அணிச் செயலாளர்கள் :

தேவையான அணிகளை உருவாக்க அமைப்பு நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது.

ஒவ்வொரு அணிக்கும் ஒரு அமைப்பு அணிச் செயலாளரை நியமிக்கலாம்.

இவர்கள் தலைமை நிர்வாகக் குழுவிற்கு இணையான அந்தஸ்தைப் பெறுவார்கள்.

அமைப்புச் செயற்குழு :

அமைப்பு நிர்வாகிகள், நடப்பு நிர்வாகத்திற்கு முந்தைய அமைப்பு நிர்வாகிகள், அமைப்பு அணிச் செயலாளர்கள், பேச்சாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிச் செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள், ஆகியோர் அமைப்புச் செயற்குழு உறுப்பினர்கள் ஆவர்.

தேவைப்பட்டால் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க அமைப்பு நிர்வாகத்திற்கு அனுமதி உண்டு.

அமைப்புச் செயற்குழு குறைந்தது 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும்.

நிர்வாகக்குழு ஒப்புதலுடன் மாநிலச் செயற்குழு கூட்டங்களை பொதுச் செயலாளர் கூட்டுவார்.

அவசர மாநில செயற்குழு தவிர ஏனைய அமைப்புச் செயற்குழுக்கள் பதினைந்து நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட வேண்டும்

அமைப்புப் பொதுக்குழு :

அமைப்புச் செயற்குழு உறுப்பினர்களும், பேச்சாளர்களும், கிளை நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினராவர்.

குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறை அமைப்புப் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும்.

ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தை அமைப்புத் தலைவர் கூட்டுவார், அவரே தலைமை தாங்குவார்.

ஆண்டுப் பொதுக்குழுவில் கடந்த ஆண்டின் செயல்பாடு மற்றும் வரவு செலவு அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.      

பொதுக் குழு உறுப்பினர்களே மாநில நிர்வாகிகளைப் பரிந்துரைப்பார்கள். அமைப்பின் நிர்வாக தேர்தல் விதிமுறைப்படி தேர்வும் செய்வார்கள்.

பொதுக்குழுவிற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பே பொதுக்குழு குறித்து எல்லா பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு செய்யப்பட வேண்டும். 

அந்த அறிவிப்பில் பொதுக்குழு கூட்டப்படும் நாள், நேரம், இடம் கூட்டப்படும் நோக்கம் அல்லது விவாதிக்கப்பட இருக்கும் பொருள் ஆகிய அனைத்தையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

அமைப்பின் சட்ட விதிகளைத் திருத்த, மாற்ற, சேர்க்க, நீக்க இவை யாவும் சிறப்புத் தீர்மானங்களாக பொதுக்குழுவில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும்.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு ஆதரவுடன் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

சிறப்பு அழைப்பாளர்கள் :

அமைப்புப் பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களை பரிந்துரைகளின் அடிப்படையில் அமைப்பு நிர்வாகக்குழு தீர்மானிக்கும்.

மாவட்ட நிர்வாகம் :

ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், மூன்று துணைச் செயலாளர்களைக் கொண்டது மாவட்ட நிர்வாகக் குழுவாகும்.

தேவையைக் கருதி மாவட்ட துணைச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கும். அதைப் பரிசீலித்து அமைப்புத் தலைமை அங்கீகாரம் வழங்கும். அதற்கு அடுத்து வரும் பொதுக் குழுவில் ஒப்புதல் பெறவேண்டும்.

மாவட்ட நிர்வாகம் மாவட்டப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.

இதன் பதவிக் காலம் அதிகபட்சம் மூன்றாண்டுகளாகும்..

அமைப்புத் தலைமையின் கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக மாவட்ட நிர்வாகக் குழு செயல்படும்.

தமது மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளைகளின் நடவடிக்கைகளை இக்குழு கண்காணித்து வழிநடத்தும்.

தலைவர் : இவர் மாவட்ட நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியாவார். மாவட்ட அமைப்பின் அன்றாட பணிகளை தானும் தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகளுக்கும் பகிர்ந்தளித்து கண்காணிப்பது இவரது பிரதான பணி. மாவட்ட நிர்வாகக்குழு மற்றும் மாநில நிர்வாக அனுமதியுடன் மாவட்ட செயற்குழுவை இவர் கூட்டுவார்.

செயலாளர் : மாவட்ட நிர்வாகத்தின் முடிவு மற்றும் செயல் திட்டங்களை செயல்படுத்துபவர்.

பொருளாளர் : மாவட்ட பொருளாதாரங்களுக்கும் அதன் கணக்குகளுக்கும் இவரே பொறுப்பாவார். மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளருடன் இணைந்து வங்கிக் கணக்குகளை இயக்குவார். நிர்வாகத்தின்  அனுமதியோடு பொருளாதாரத்தை அமைப்பின் பொருளாதார விதிமுறைகளின்படி கையாள்வார்.

துணைத் தலைவர் : இவர் தலைவருக்கு உதவியாகச் செயல்படுவார். தலைவர் இல்லாத போது நிர்வாக அனுமதியுடன் அவரது பொறுப்புகளைக் கவனிப்பார்.

துணைச் செயலாளர் : அமைப்பின் செயல்திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார். தலைவர், செயலாளர் வழிகாட்டுதலின் படி பணிகளை மேற்கொள்வர்.

மாவட்ட அணிச் செயலாளர்கள் : மாவட்ட அணிச் செயலாளர்களை அணிக்கு ஒருவர் வீதம் மாவட்ட பொதுக்குழுவில் தேர்வு செய்யலாம் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமித்துக் கொள்ளலாம்.

மாவட்டச் செயற்குழு :

மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், நடப்பு நிர்வாகத்திற்கு முந்தைய மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிச் செயலாளர்கள், மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினராவார்கள்.

குறைந்த பட்சம் ஆண்டுக்கு இரண்டு முறை மாவட்ட செயற்குழு கூட்டப்பட வேண்டும்.

மாவட்டப் பொதுக்குழு :

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கிளை அணிச் செயலாளர்கள் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவர்.

மாவட்டப் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அமைப்புத் தலைமையின் மேற்பார்வையில் அமைப்பின் விதிப்படி நடத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டு பொதுக்குழுவிலும் மாவட்ட ஆண்டறிக்கை மற்றும் மாவட்ட வரவு செலவு அறிக்கை மாவட்ட நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்படும்.

மண்டல நிர்வாகம் :

மேற்கூறப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து விதிகளும் மண்டல நிர்வாகத்திற்கும் பொருந்தும்.

கிளை நிர்வாகம் :

ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகியோரைக் கொண்டது கிளை நிர்வாகக் குழுவாகும்.

கிளை நிர்வாகிகளின் பணிகள் மாவட்ட நிர்வாகிகளின் பணிகளைப் போன்றதே

மாவட்டத் தலைமைக்கு கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக கிளை நிர்வாகக் குழு செயல்படும்.

இக்குழு கிளையின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

இதன் பதவிக்காலம் அதிகபட்சம் மூன்றாண்டுகளாகும்.

கிளை நிர்வாகம் மாவட்ட ஒப்புதலுடன் அணிச் செயலாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.

கிளைப் பொதுக்குழு :

மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் மாவட்ட நிர்வாகியின் தலைமையில் குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறை கிளைப் பொதுக்குழு நடத்தப்படும்.

கிளை உறுப்பினர்கள் அனைவரும் கிளைப் பொதுக்குழு உறுப்பினர்களாவர்.

பொதுக்குழுவில் கிளையின் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு சமர்ப்பிக்கப்படும்.

தேர்தல் அதிகாரி :

அமைப்பின் அனுபவமிக்க இருவரை அமைப்பு நிர்வாகம் அமைப்புப் பொதுக்குழுவிற்கு தேர்தல் அதிகாரியாக நியமிக்கும். அவர்கள் அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு அமைப்பு நிர்வாகிகளைத் தேர்வு செய்வார்கள்.

அமைப்பு நிர்வாகி அல்லது அமைப்பு நிர்வாகத்தால் நியமிக்கப்படும் பிரதிநிதி மாவட்ட தேர்தல் அதிகாரியாவார்.

மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் மாவட்ட நிர்வாகி கிளைத் தேர்தல் அதிகாரியாவார்.

தேர்தல் அதிகாரியின் பணி அத்தேர்தலுடன் முடிவுபெறும்.

பதவி விலகல் :

பதவி விலக விரும்பும் அமைப்பு நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அமைப்புத் தலைவரிடம் மனு செய்ய வேண்டும். நிர்வாகக் குழு அதை ஏற்றுக் கொண்டால் சம்பந்தப்பட்ட பொறுப்பினை வேறு உறுப்பினரிடம் நிர்வாகக் குழு ஒப்படைக்க வேண்டும். அடுத்து வரும் பொதுக்குழுவில் இதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

தலைவர் பதவி விலக விரும்பினால் பொதுச் செயலாளரிடம் மனு செய்ய வேண்டும். அடுத்த பொதுக்குழு கூடும்வரை துணைத் தலைவர் தலைவராக செயல்படுவார்.

பதவி விலக விரும்பும் மாவட்ட நிர்வாகிகள் மாநிலத் தலைமைக்கு மனு செய்ய வேண்டும்.

பதவி விலகும் கிளை நிர்வாகிகள் மாவட்டத் தலைவருக்கு மனு செய்ய வேண்டும்.

ஆவணத் தாக்கல் :

சங்கப் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் அறிக்கைகள் மற்றும் படிவங்களை அமைப்புத் தலைவர் தாக்கல் செய்வார்.

நிதி நிர்வாகம் :

அமைப்பின் நிதி, அமைப்பின் பெயரில் வங்கிகளில் நடப்புக் கணக்கு ஆரம்பித்து வைப்பீடு செய்யப்படும். வங்கிக் கணக்கினை தலைவர், செயலாளருடன் இணைந்து பொருளாளர் இயக்குவார்.

சொத்து

அமைப்பின் பணிகளுக்காக வாங்கப்படும் சொத்துக்களை, அமைப்பின் பெயரிலோ அல்லது கிளை தனியாக ஒரு ட்ரஸ்ட் அமைத்தோ சொத்துக்களை பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக வசூல் செய்து தனிநபர் பெயரில் சொத்துக்களை வாங்கக் கூடாது. ஒரு பகுதியில் வாங்கப்படும் சொத்துக்களில் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களே அதிகாரம் செலுத்த முடியும். அமைப்பு நிர்வாகம், நிர்வாக ரீதியாக அதிகாரம் செலுத்த முடியுமேயன்றி சொத்தில் எவ்வித உரிமையும் கோர முடியாது.

கிளை, மாவட்டம், மாநிலம் என எந்த நிர்வாகத்திற்கு சொத்து வாங்குவதாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட நிர்வாகம் ஆலோசித்து யார்/எந்த பெயரில் வாங்குவது என முடிவு செய்து கொள்ளலாம்.

அமைப்பிற்குச் சொந்தமான சொத்துக்களின் ஆவணங்கள் எந்த மட்ட நிர்வாகத்திற்கு வாங்கப்படுகிறதோ அந்த நிர்வாகமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

 பணியாளர் நியமனம் : தேவைக்கேற்ப அமைப்பின் பணிகளை கவனிக்க பணியாளர்களை நியமனம் செய்து கொள்ள நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.

 நடவடிக்கை :

அமைப்பின் நலன், நோக்கம், மற்றும் சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் உறுப்பினர் மீதும், அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படும் உறுப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் உரிமை அமைப்பு நிர்வாகத்திற்கு உண்டு

நடவடிக்கைக் கோரப்படும் வழக்குகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விசாரித்து, குற்றத்தின் நோக்கம், சூழல், அதனால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு சூழலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

  கோரம் :

அனைத்துக் கூட்டங்களுக்கும் கோரம் அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் (1/3) ஒரு பங்காகும்.

கோரம் இல்லாதபோது ஒரு மணிநேரம் தள்ளி வைத்து அதே கூட்டத்தை கூட்டலாம். இதற்கு கோரம் தேவையில்லை.

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்

அமைப்பின் சட்ட விதிகளில் குறிப்பிடப்படாத இதர விஷயங்களுக்கு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்(1975) மற்றும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள் (1978) பொருந்தும்.

மேற்கண்ட அமைப்புச் சட்ட விதிகள் உண்மை நகல் என சான்றிடப்படுகிறது